ஞாயிறு, டிசம்பர் 31, 2006

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

காதல் படிக்கட்டுகள்: அறிவுமதி

ஒரு காலத்தில் ஜூ.வி யில் 'காதல் படிக்கட்டுகள்' தொடராக வந்துகொண்டிருந்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம். அனேகமாக அதில் வந்த அனைவரின் காதல் கருத்துக்களையும் படித்திருக்கிறேன். அவற்றில் என்னை மிகவும் பாதித்தது கவிஞர் அறிவுமதி அவர்கள் எழுதியதுதான். சமீபத்தில் அவரின் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைத் தீ' யில் அதை மீண்டும் படிக்க நேர்ந்ததின் விளைவே இப்பதிவு!

சில விஷயங்கள் பற்றி நமக்கே தெரியாமல் சில கருத்துக்கள் இருக்கும். கூப்பிட்டுக் கேட்டால் கூட நமக்கு அவற்றைச் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அதே கருத்துக்களை வேறொருவரின் வார்த்தைகளாகக் கேட்கவோ, படிக்கவோ நேர்கிறபொழுது ஏற்படும் ஒத்ததிர்வில் மனம் மிக உயரத்தில் துள்ளுவதை உணர்ந்திருக்கிறீர்களா? அறிவுமதியின் காதல் படிக்கட்டுகள் படித்தபோது அப்படித்தான் உணர்ந்தேன்.

அதற்கு முன் அவரை எனக்கு அறிமுகமில்லை. 'அடுத்த வாரம் கவிஞர் அறிவுமதி' என்ற அறிவிப்பைப் பார்த்ததிலிருந்தே எனக்கு அடுத்த வார ஜூ.வி யில் ஆர்வமில்லை! யாரோ வளர்ந்து வருகிற கவிஞர் போலும் என நினைத்துக்கொண்டேன். என்ன பெரிதாக எழுதியிருக்கப்போகிறார் என்று அலட்சியமாய்ப் படிக்க ஆரம்பித்தவன், முதல் பாராவின் முடிவிலேயே தலையை உதறிக்கொண்டு மீண்டும் கட்டுரையின் ஆரம்பித்திலிருந்து ஆரம்பித்தேன்! முழுவதும் படித்தபின், அறிவுமதி என்பவர் யார், அவர் வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் எனத்தேட ஆரம்பித்துவிட்டேன்.

'காதல் - கொடுப்பதன்று, எடுப்பதன்று, ஈர்த்துக் கவிழ்ப்பதன்று, மடக்குதல் அன்று, மடங்குதல் அன்று. எதிர்பார்த்த வெறியில்... எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று. இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்... தம் காத்திருத்தலின் தற்செயல் நொடியில் திகைத்துச் சந்தித்து... உள்திரும்பி... சந்திப்பில் நிறைவடைவது.'

- இப்படி ஆரம்பிக்கும் அந்தக் கட்டுரை முழுவதுமே கொண்டிருப்பது அடிக்கோடிட வேண்டிய வாசகங்களைத்தான் என்றாலும், எனக்கு மிகப்பிடித்த சில வரிகள் இங்கே...

'அஃறிணையில் உயிரோட்டமாக இருக்கிற அது... உயர்திணையில் வெறும் உடலோட்டமாகி விடுகிறது. கற்பிதங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிற சமூக விலங்குகளுக்குக் கூண்டின் கூரைதானே வானம்!'

'இந்தப் பிறவியில் சேரமுடியாவிட்டால் என்ன... அடுத்த பிறவியில் சேர்ந்து வாழ்வோம் என்பதுவும்... உடல்களால் இணையாவிட்டால் என்ன... உயிர்களால் இணைந்து வாழ்வோம் என்பதுவும் ஏமாற்று. பொய்.'

'தொடுதலும், புணர்தலும் காதலின் நெருங்கிய மொழிகள். அவற்றைப் பேசாதே எனச்சொல்லும் தத்துவங்கள் யாவும் பொய் பேசும்.'

'குற்றமற்ற விலங்குகளை நமக்குள் நமே வளர்த்துப் பழக நாட்கள் இன்னும் நமக்கு அமையவில்லை. நமது உள்ளம் என்பது தொலைதூரத் தலைமுறைகளைத் தாண்டிய வேட்டைக்கால வாழ்வியற் கருத்துருவாக்கங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.'

'நாம் பிளந்து கிடக்கும் பேரண்டப் பிசிறுகள். காதலில் இணைகிற ஆணும் பெண்ணும்... பேரண்ட இயக்கத்தின் ஆணி வேருக்குள் நெகிழ்ந்து இறங்குகிறார்கள். அது இருவரின் முழுமையடைதல் இல்லை. முழுமைக்கான அடுக்குகளின் ஒழுங்கமைவில்... அது ஒரு பகுதி.'

'காதலின் மையத்தில் குனிந்து முகம் பார்க்கிற எவரும் உலகச் சுழற்சியின் ஏதோ ஓர் ஒழுங்கின்மையைச் சரி செய்கிறவர்களாகவே இருப்பார்கள்.'

'காமத்துக்கான முன் ஒத்திகையாக அதனைக் கருதுகிறவர்களுக்கே அது தற்காலிகம். உடல்களால் காமம் பேசி முடித்த நிறைவில் உயிர்களால் காதல் பேச முடிகிறவர்களுக்கு மட்டுமே அது நிரந்தரம். எவரும் எவருக்கும் நன்றிசொல்ல நினைக்காத தருணங்களால் பேச வேண்டும் அதனை.'

'பெண்ணாகத் தெரியாத எந்த ஆணுக்கும் காதலின் காட்சி வாய்க்குமென்று நான் நம்பவில்லை.'

'இருவராய் இணைந்திருக்கையில்கூடத் தனிமையாய் இருக்கிற விடுதலை உணர்வை ஒரு பெண்ணுக்கு எவன் தருகிறானோ, அவன் தான் ஆண் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறான். விரும்பி வந்து ஒரு பறவை எவ்விதம் அமர்ந்ததோ அவ்விதமே விரும்பிய வண்ணம் அது பறந்து செல்லுதலுக்கும் இடையூரில்லாமல்... கிளையாக இருக்க உடன்படுதலே ஆணுக்கு அழகு. உரிமை கொண்டாடுதல் அன்று... உரிமை தருதலே காதல். 'தருதல்' என்கிற சொல்லுக்குள்ளும் ஒரு ஆதிக்கத்தனம் தெரிகிறதே! தருவதற்கு ஆண் யார்?'

'தருதலும் பெறுதலுமற்ற கருணைப் பெருவெளியில் சிறகுச்சிக்கலின்றிப் பறத்தலே காதல்! முழு விடுதலையை மூச்சிழுத்துப் பூப்பதுதான் காதல்.'

'என்னைச் செதுக்கியது பெண்மை. என்னில் சிற்பமானது காதல். எனக்குள் எல்லாமும் அதுதான். எல்லாமும் கற்றுத் தந்ததுவும் அதுதான்! பூவைப் பறித்துவிடாமல் அதன் செடியிலேயே பார்த்து மகிழ... அசையும் ஊதுவத்திப்புகையில் இசை கேட்க... பயணங்களூடே உடைக்கப்படும் பாறைகள் பார்த்து அழ... இறந்து கிடக்கும் வண்ணத்துப் பூச்சியை எடுத்துப் போய் அடக்கம் செய்ய... போக்குவரத்து மிகுந்த சாலையில் கிடந்து நசுங்கும் ஏதோ ஒரு குழந்தையின் ஒற்றைச் செருப்பைத் தவித்து எடுத்து ஓரமாய் வைக்க...

அதுதான்...

ஆம்...

அதுதான் எனக்குக் கற்றுத் தந்தது.

காதல் கற்றுத் தரும். காதல் எல்லாம் தரும். காதலியுங்கள். புரிந்துகொள்வதை அதிகம் பேசலாம். உணர்ந்து கொள்வதை!.'

4 கருத்துகள்:

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் சொன்னது…

'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்...

அறிவுமதி அவர்களை பற்றிய வரி அருமை... கட்டுரை மேலும் சிறப்பு சேர்க்கிறது.

Bala Pillai சொன்னது…

Arivumathi kuluvai eppidi min-anjal mooliyamaa thodarpu kolvathu?

Enakku oru min-anjal anupungal. Ithu 1995-il Thamiz Inayam aarambithavar, Sydney-il thangum Bala Pillai -- balapillai @ gmail.com

Gobinath.S சொன்னது…

ஒரே வார்த்தையில் சொல்ல ஆசை.. தங்கள் வரிகளுக்கு "நன்றி"..

kavikkaathalan சொன்னது…

thamizhanbar Annan Arivumathy avargalin
Natpukkaalam padiththu
uLam makizhnthu
Natpin uNmai viLakkam
arinthu avar vazhi vazhiyae
kaviyezhuthak katra
oru tambi kavikkaathalan eluthugiRaen...
Annanin kaathalmathi
meendum manathil kuLirootta
muLaikka vaendum...
intha thagara oasai paadalkalaik
kaetta kaathugaLukku
oru nodiraavathu puthu uyir pera
vazhitharak koodaathaa annaa...
ungal pathilukkaaga kaaththirukkum..


kavikkaathalan...
Na.vinoth bharathi...

na.vinothbharathi@gmail.com