செவ்வாய், ஜூலை 12, 2011

பேரறிஞன் என்கிற சொல்லை நாம் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

ஆனால் வேரறிஞன் என்கிற சொல்லைக் கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா?

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

கவிஞர் அறிவுமதி.



ஆழத் தமிழுக்குள்

ஆய்வுப் பணிக்காக

மூழ்கி

முக்குளித்த

மூத்த தமிழ் பேரறிஞன்!

இலக்கணங்கள் இலக்கியங்கள்

எதற்கும்

குறிப்பின்றி

உடனுக்குடன் இங்கே

ஊற்றறிவில்

புதுமை சொல்லும்

உயர்த் தமிழின் வேரறிஞன்!

பண்பாட்டு விழுமியங்கள்

பக்திப்

பொருண்மியங்கள்

நாடகங்கள்

திரைப்படங்கள்

என அனைத்துக் கிளைகளிலும்

அடுக்கெடுத்துப்

பூத்த மகன்!

ஆண்டாண்டு காலமிங்கே

அழுக்கேறிக்

கிடந்த

தமிழ் இழுக்கை

துடைத்தெறிந்து

ஈடற்ற மொழியென்றால்

அது

என்றும்

தமிழ் என்றே

ஆய்வறிஞர்

ஆம்

சொல்ல

ஆதாரம் பல தந்து

அருந்

தமிழைக்

காத்த

மகன்!

மூடி வைத்த நூலகம் போல்

மூச்சிழந்து தூங்குகிறார்!

மொத்த தமிழ்

ஆய்வுலகும்

பேச்சின்றித்

தேம்புகிறார்!

ஐயா சிவத்தம்பி!

அன்னைத்

தமிழுக்கு

உம் உழைப்பு

பேருழைப்பு!

ஐயோ... உலகத்து

அனைத்துத் தமிழர்க்கும்

உம் இழப்பு பேரிழப்பு!