வெள்ளி, நவம்பர் 25, 2005

பூத்த நெருப்பு

பூத்த நெருப்பு

அறிவுமதி

*
என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று

கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று

சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்

பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்

மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே

காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ...
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்...இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்

தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது

ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன

கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்

கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்

புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி

*விரைவில் மறுபதிப்பாக வெளிவரவுள்ள அறிவுமதி முழுத்தொகுப்பிலிருந்து*

வெள்ளி, நவம்பர் 11, 2005

தமிழ்க்காற்று அறிவுமதி

தமிழ்க்காற்று

அறிவுமதி

'கலை, கவிதை எல்லாம் இருக்கட்டும். உலகின் எந்த நிலப் பரப்பிலிருக்கும் தமிழனுக்கும் ஒரு துயரென்றால் பொறுக்காத மனமுடையவர். பேசுவது, எழுதுவது என்று நிறுத்திக் கொள்ளாமல், களத்தில் இறங்கி இயங்குபவர். இளைஞர்கள் தமிழ் எழுத வருகிறார்கள் என்றால், தனக்கு வருகிற சந்தர்ப்பங்களையும் தாரை வார்த்துக் கொடுக்கிறவர். எப்போதும் நான்கு 'தம்பி'களோடே இருப்பதால் சிந்தனையில் மார்க்கண்டேயர்...
அவர்தான் அறிவுமதி.


'வாடி வாடிநாட்டுக்கட்டை
வசமா வந்துமாட்டிக்கிட்டே...
ஆளில்லா ஆத்தாங்கரை
அதுக்கு இப்பஎன்னாங்குறே...'

என்று அதிரடியாகத் காதலிக்கக் கற்றுத் தருகிற அதேநேரம்,

'கண்ணாலே உய்யாஉய்யா நீலயா மயா..!'
என்று தென்றலாக மாறவும் தெரிந்திருப்பவர், தான் 'பாட்டாளி' ன கதையை இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

''பட்டிக்காட்டுப் பையனான என்னை, திரைப்பட வாசலுக்கு அழைத்துச் சென்றவர்கள் - பூவை செங்குட்டுவன், என் நினைவில் வாழும் நண்பர் - இயக்குநர் தசரதன் ஆகியோர்.

அந்த அல்லிநகரத்து அழகுக் கறுப்பனின் 'பதினாறு வயதினிலே' படம் பார்த்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்ற ஆவல்தான் எனக்குள் உயர்ந்ததே தவிர, பாடலாசிரியராக வரவேண்டும் என்ற எண்ணம் நொங்குநீர் தடவிய வேர்க்குருவாய் தணிந்துவிட்டது.

'கிழக்கே போகும் ரயில்' திரைப் படத்துக்கு நான் எழுதிய கவிதை மடலைப் படித்து வியந்த இயக்குநர் பாரதிராசா தன்னுடன் பணியாற்ற அழைத்தார். அதே நேரத்தில் இயக்குநர் பாக்யராச் அவர்களும் தன்னுடன் பணியாற்ற அழைத்தார். நான் பாக்யராசிடம் சேர்ந்தேன். அவரிடமிருந்து வல்லபன், பாலுமகேந்திரா, பாரதிராசா என இயக்குநர் பயிற்சி நீண்டது.

எனது இயக்குநர் பாலுமகேந்திரா தெலுங்கில் இயக்கிய 'நிரீக்சனா'வை எனது நண்பர்கள் இரகுபதிரமணன், பாபு ஆகியோர் 'கண்ணே கலைமானே' என்று தமிழில் செய்தபோது, அதில் பாடல்கள் எழுத வற்புறுத்தினார்கள்.

'தாலாட்டே! நீ தூங்கிப்போக நான் தாயானேன்!
நாள்காட்டித் தாள் தேங்கிப்போக நான் நீயானேன்!'
என இசைஞானி இளையராசா இசையில் எழுதிய அந்தப் பாடல்களை மறக்க முடியாது.

அப்புறம்... 'அன்னை வயல்' திரைப்படத்தில் என் பொன்வண்ணன் எழுதச் செய்த இரு பாடல்கள். சிற்பியின் இசையில்...

'பூவே! வண்ணப் பூவே! கிழக்கே பொட்டு வைத்தாயே!' என்று என் திரைப்பயணம் துவங்கியது.

'கிழக்குச் சீமையிலே' திரைப் படத்தில் பணியாற்றுகிறபோது என்மீது நம்பிக்கை வைத்த அண்ணன் தாணு அவர்கள், 'பிரியதர்சன் இயக்கும் 'சிறைச் சாலை' திரைப்படத்துக்கான உரையாடல்.. பாடல்கள் அறிவுமதி' என்று அறிவிக்கப் போகிறேன். என்ன சொல்கிறாய்?' என்றார்.
'சரி' என்றேன்.

திரைத்துறையில் எனக்கு 'விடுதலை' பெற்றுத் தந்தது 'சிறைச்சாலை'.

'மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ,
இன்று எந்தன் சூரியன் பாலையில் தூங்குமோ,
கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ,
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ..
ஆசை அகத்திணையா.. வார்த்தை கலித்தொகையா..
அன்பே நீ வா! வா! காதல் குறுந்தொகையா,

என அகத்துறைப் பாடல்களில் மட்டுமல்லாமல், விடுதலைப் போராட்ட வீரர்கள் பாடுவதாக அமைந்த..

'வீரத்தைக் குண்டுகள் துளைக்காது!
வீரனைச் சரித்திரம் புதைக்காது!
நாட்டை நினைக்கும் நெஞ்சங்கள் வாடகை மூச்சில் வாழாது!
இழந்த உயிர்களோ கணக்கில்லை!
இருமிச் சாவதில் சிறப்பில்லை!
இன்னும் என்னடா விளையாட்டு
எதிரி நரம்பிலே கொடியேற்று!

என்கிற புறப்பாடலிலும் இலக்கியச் செழுமையுடன் தமிழ் செய்ய வாய்ப்புத் தந்தவர் அண்ணன் தாணு அவர்கள்தான்.

முதன்முதலில் இசைஞானி இளையராசா அவர்களோடு நேரிடையாக அமர்ந்து எழுதிய பாடல். 'இராமன் அப்துல்லா' படத்தில் இடம்பெற்ற 'முத்தமிழே! முத்தமிழே!' பாடல்தான். அதில் வரும் காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை! நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல்மழை! என்கிற வரிகளை இசைஞானியும் பாலு மகேந்திராவும் தாய்மையுடன் பாராட்டினார்கள்.

'தேவதை'யில் நண்பர் நாசருக்காக நான் எழுதிய பாடல்...

'தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபம் அது காலங்காலமாய் காதல் கவிதைகள் பேசுமே'
தீப ஒளியில் சூழலே பிரகாசிக்க அதி அற்புதமாக அந்தப் பாடலைப் படம் பிடித்திருந்தார்கள். பிரமாண்டங்களைக் காட்டி வித்தைகள் பண்ணுகிறவர்களுக்கு மத்தியில் எளிமையின் அழகால் சிறப்புச் சேர்த்திருந்தார் ராசா.

அதேபோல, 'சேது'. என் தம்பி பாலாவின் முதல் படம். மனதின் வலியை அத்தனை உக்கிரமாக நான் அதுவரை உணர்ந்ததில்லை. காதலை இளமையின் கொண்டாட்டமாகவே பார்க்கத் தருகிற தமிழ்த் திரைப்பட உலகில் அதன் மறுபக்கத்தை, ஆன்மாவின் அலறலோடு அள்ளிக்கொண்டு வந்த பாலாவின் படத்தில்...

'எங்கே செல்லும் இந்தப் பாதை யாரோ... யாரோ... அறிவார்'

பாடலை மறக்க முடியுமா? அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தந்த தமிழும், வாணியம்பாடியில் அப்துல் ரகுமான் அவர்கள் தந்த தமிழும்தாம் என்னுடைய பாடல்களில் இலக்கிய அழகுகள் ஒளிரப் பயன்படுகின்றன என்பதை இங்கே நான் நெகிழ்ந்த நன்றியில் பதிவுசெய்ய வேண்டும்.

'பிரிவொன்றைச் சந்தித்தேன் முதல் முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புவது காற்று!

ஒருவரி நீ ஒருவரி நான்
திருக்குறள் நாம் அன்பே! அன்பே!
தனித்தனியே பிரித்து வைத்தால்
பொருள் தருமோ கவிதை இங்கே?'

'பிரியாத வரம் வேண்டும்' திரைப் படத்துக்காக எழுதிச் சென்றிருந்த இந்த வரிகளைப் படித்ததும் இசையமைப்பாளர் இராச்குமார் உணர்ச்சிவசப்பட்டுத் தனது விரலில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி எழுந்து நின்று என் விரலில் அணிவித்தார். 'நான் தங்கம் அணிவதில்லை' என்றேன். 'இது உங்களுக்கில்லை.. தமிழுக்கு' என்று கூறி கட்டியணைத்துக்கொண்டார்.

'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' பாடல் பதிவுகளின்போது இசைப் புயல் ஏ.ர். ரகுமான் அவர்களிடம் அண்ணன் தாணு அவர்கள் என்னைப் பற்றிக் கூறியிருக்கிறார். அதை நினைவில் வைத்து இயக்குநர் அழகம்பெருமாளிடம் சொல்லி 'உதயா' திரைப்படத்துக்காக ஒரு மெட்டு தந்து எழுதிக்கொண்டு வரும்படி கூறியிருந்தார். அது ஒரு மண விழாப் பாட்டு.

பனிக்குகையின் உச்சியிலிருந்து பனித்துளிகள் சொட்டிச் சொட்டி பனிச் சிற்பங்கள் உருவாக்குவதுபோல் அவர் உருவாக்கிய 'புது வெள்ளைமழை... என் மேல் விழுந்த மழைத்துளியே... மார்கழிப் பூவே...' போன்ற உயிரைப் பிழியும் மெல்லிய பாடல்களில் எனக்குப் பெருவிருப்பம். எனவே, அவரோடு இணைகிற முதல் பாடல் அத்தகைய மெல்லிய மெட்டாக இருந்தால் நலமாக இருக்கும் என்று கூறி இந்த மெட்டைத் திருப்பித் தந்துவிட்டேன். அதற்காக எதுவும் நினைக்காமல்.. 'அப்படியா கூறினார்... அப்படியானால் அப்படியொரு பாடலை அவரை எழுதச் சொல்லுங்கள்.. பயன்படுத்துகிறேன்' என்று சொல்லியனுப்பினார்.

'அழவைப்பேன் உன்னை அன்பே!
என்னைக் கிள்ளி!
விழ வைப்பேன் உன்னை அன்பே!
என்னைத் தள்ளி
இதயம் திறந்து இறங்கிப் பார்த்தேன் நான் நான்

நான் துடிக்க மறந்து துள்ளிக் குதித்தாய் நீ நீ நீ
மழையைப் பிடித்து ஏறிப் பார்த்தேன்நான் நான் நான்
உயிரை உதறி உலரப்போட்டாய் நீ நீ நீ'

என்று நான் எழுதியனுப்பிய பாடலைப் படித்து மகிழ்ந்து, இன்னொரு மெட்டையும் தந்தனுப்பினார்.

'ஊனே ஊனேஉருக்குறானே!
உயிரின்மீதே உயிரை வைத்துநசுக்குறானே!'
என்ற இந்தப் பாடலுடன்தான் அவரை முதன்முதலாக அழகம் பெருமாளுடன் சந்தித்தேன். பாடலைப் படித்து மகிழ்ந்து, அன்றிரவே பாடகர்களை அழைத்துப் பதிவு செய்தார். 'தெனாலி'யிலும் உடனே வாய்ப்புத் தந்தார்.
'வல்லினம் மெல்லினம்இடையினம்நாணம் கூச்சலிடசிவந்தனம்' இத்தகைய இலக்கிய அழகுகளை அவர் விரும்பிச் சுவைக்கிறார்.

சந்தம் நெருடாத, தமிழ்ச் சத்து குறையாத சொற்களுக்காகத் தாகம் வளர்த்துத் தவிப்பவர் இசையமைப்பாளர் வித்யாசாகர்.

'தோம் தோம்தித்தித்தோம்தொலைவிலிருந்தும்சந்தித்தோம்
கண்ணால்கண்ணில் கற்பித்தோம்காதல்பாடம் ஒப்பித்தோம்
தீண்டத் தீண்ட தூண்டும்விரலைத் திட்டிக்கொண்டே தித்தித்தோம்!'


என்ற பாடலை இயக்குநர் பிரசாத், எடுத்துப்போய் வித்யாசாகரிடம் தந்தார். அடுத்த அரை மணி நேரத்தில் பாடலுக்கான மெட்டு தயார்!

அடிப்படையில் நானொரு புலூசைக் காட்டுப் பிள்ளை. எனக்குள் அமெரிக்காவைத் திணிக்க நகரம் எவ்வளவோ முயற்சி செய்கிறது. 'ஆங்கிலம் கலந்து பாடல் எழுதத் தெரியுமா?' என்கிறது. ஊத்தாவுக்குள் சிக்கிய விறால்மீன் உள்நுழைந்து துழாவும் கைகளுக்கு அகப்படாமல் நழுவிப்போவதாய், நான் தப்பித்துக் கொண்டிருக்கிறேன். அம்மாவை விற்றுத்தானா பிள்ளைகளுக்குச் சோறு போட வேண்டும் என்கிற தவிப்பில் திமிறிக் கொண்டிருக்கிறேன்.
இதற்கு நடுவிலும் என் புலூசைக் காட்டுத் தமிழையும் பாடல்களில் பயன்படுத்த வாய்ப்புத் தரும் இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் எப்படி நன்றி சொல்ல!

நடவு நடும் பெண்கள்எல்லாம் அழுக்கு பாடல்கள் தவிர! இது ஒரு சப்பான் நாட்டு அய்க்கூ. இதுதான் உண்மை.
ஆனால், அத்தகைய நடவுப் பாடல்கள் செழித்துக் கிடந்த வயல்களில் இன்று போய்ப் பார்க்கிறேன். மோழி பிடித்து, வரிசை கட்டி ஏர் உழுத இடத்தில்... இன்று ஒற்றை உழுவண்டி பேரிரைச்சலில் உழுதுகொண்டிருக்கிறது. இந்தப் பேரிரைச்சலுக்கு நடுவிலும் அந்த வண்டியிலிருந்து கேட்கிறது திரையிசைப் பாடல்!

பாடல்களைப் பாடியபடியே உழுதவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே உழுகிறார்கள். பாடல்களைப் பாடியபடியே மாட்டு வண்டி ஓட்டியவர்கள், இன்று பாடல்களைக் கேட்டபடியே பேருந்துகள் ஓட்டுகிறார்கள். உற்பத்தியாளர்கள் நுகர்வாளர்களாக மாற்றப் பட்டுவிட்டார்கள். அள்ளி அள்ளி இலவசமாகத் தந்தவர்களின் மீது, 'வாங்கிக் கொள்ளுங்கள்' என்கிற வணிகச் சூழல் சுமத்தப்பட்டிருக்கும் காலத்தில் வாழலாச்சே!''

நன்றி ; ஆனந்தவிகடன்

சாரல் மழை

அடங்காத குதிரை மாதிரி அறிவுமதி!

'நான் பெரியாரின் மகன். பிரபாகரனின் சகோதரன்' என்று கோடம்பாக்கத்தில் நின்று கொள்கை பேசுகிற தீவிரம். இளையராஜா, ரஹ்மான் என யாருக்கு எழுதினாலும் ஆங்கிலம் கலந்து எழுதமாட்டேன் என்கிற பிடிவாதம். ''கிளிக்கு எதற்கு கழுகின் சிறகுகள்?'' என்கிறார் கோபமாக.

இருபத்தைந்து ஆண்டுகளாகக் கவிதைத் தமிழும் இப்போது திரைத் தமிழும் எழுதுகிற அறிவுமதியின் பெயர் மதியழகன். நண்பன் அறிவழகனின் பெயரையும் தனதாக்கி அறிவுமதி ஆனவர். அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, பாரதிராஜா விடம் பாடம் பயின்றவர். 'சேது' பாலா, பழநி பாரதி தொடங்கி ஒரு இளமைப் பட்டாளத்துக்கே இவர்தான் ஆரம்பப் படிக்கட்டு. காதல் பற்றிப் பேச ஆரம்பித்தால் கவிதை யாகப் பொழிகிறார்

''காதலை உணர்வு பூர்வமாக, அறிவுபூர்வமாக என இரண்டு தளத்தில் அணுகினாலும் அது மிகச் சிறந்த வழியாகவே படுகிறது எனக்கு. எல்லா உயிர்களிலும் காமம், காதல் என்பன மிக இயல்பாக உள்நுழைந்து வெளியேறும்போது, மனிதர்களில் மட்டும் தான் நுழையத் திணறி, நுழைந்தாலும் வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கிறது. சூழல்தான் காரணம். காதலை நாம் இலக்கியங்களில், திரைப்படங்களில் கொண்டாடுகிறோம். ஆனால், நிஜத்தில் நசுக்கப் பார்க்கிறோம். சமூகம் அதைக் கீழானதாகக் கருதி வெறுத்து ஒதுக்க ஒதுக்க, அது வெறி கொண்டு வளரத் தான் செய்யும். அதை நெறிப்படுத்தாத வரைக்கும் திரையரங்க இருளையும் வெளிச்சம் குறைந்த விடுதிகளையும்தான் தேடி ஓடும்.

காதலை மதிக்கப் பழகினால் போதும்... அது அதன் இயல்போடு மலரும். உறுதியானது வேர் பிடிக்கும். மற்றது எல்லாம் வாடி ஓடிவிடும். வாழப்போகிறவர்களை வாழ்த்தப் பாருங்கள். மறுத்தால் அந்த வாய்ப்பைக்கூட இழந்து விடும் அபாயம் உண்டு.'' ''பரபரப்பான போட்டிகள் நிறைந்த உலகத்தில் காதல் மாதிரி மென்மையான உணர்வுகளுக்கு மதிப்பிருக்கிறதா?'' ''இது குருதி உறவுகளின் உலகம் அல்ல. இது நண்பர்களின் உலகம். பொருள் தேடிப் புறப்பட்ட பிறகு உறவுக் குழுக்களின் வாழ்க்கை தொலைந்து போயிற்று. திருவிழாக்களிலும் பண்டிகைகளிலும் தான் கொத்துக் கொத்தாக மனிதர்களைப் பார்க்க முடிகிறதே தவிர... வாழ்கையென்னவோ தீராப்பெருநதியின் பயணமாகி ஓடுகிறது. பெண்கள் வந்துவிட்டார்கள். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் எனக் கல்வி நிலையங்களிலும் பயணங்களிலும் அத்தனை அலுவலகங்களிலும் உரிமைகளை மீட்கிற போராளிகளாகப் பெண்கள் வந்த பிறகு வாழ்க்கை அதன் இயல்புக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது.

பெண் சிநேகிதம் பெரிய கனவு என்ற மயக்கம் ஆண்களுக்கும் ஆண்களுடன் பேசுவதே அநாகரிகம் என்ற தயக்கம் பெண்களுக்கும் இப்போது இல்லை. கொண்டாட்டங்களில் மட்டும் அல்ல... அன்றாட வாழ்வின் அத்தனை சிக்கல்களிலும் பங்கேற்று உதவ வந்து ஆண் - பெண் நட்பு அழகாகிவிட்டது. என் நண்பன்... என் தோழி என்று வீட்டுக்கு வீடு வந்து போக அனுமதிக்கிற பக்குவம் பெற்றோருக்கும் வந்துவிட்டது. அப்படிச் சந்தித்துப் பேசிப் பழகிப் புரிந்து சேர்ந்து வாழத் துவங்குவது ஆரோக்கியமான விஷயம். ஒரு பெண்ணும் ஆணும் மணவறையில்தான் பார்த்துக் கொள்வதென்பது சோகம். அவர்களின் முதல் சந்திப்பு முதலிரவுதான் என்பது கொடுமை. 'அடைய முடியாப் பொருளின்மீது ஆசை தீராது. அபிமானம் மாறாது' என்று தேவதாஸ் வரிகளை நினைவு கூர்கிறேன். புரிந்துகொண்டவர்கள் - பகிர்ந்துகொண்டவர்கள் இணைந்தால் ஒரு பொழுது போக்காக இருந்த காதல் பொறுப்பு உணர்வைத் தரும்.

அது வானைச் சிறகுகளாக்கி மேலே உயரும். உத்வேகம் ஊட்டும். உழைக்கத் தூண்டும்... அதோடு... இந்தச் சமுதாயத்தின் பல்வேறு அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்து ஒன்று சேரவும் காதல்தான் மிகச் சரியான வழி.'' ''காதல் தோல்விகளால் துவண்டு போகிறவர்களை எப்படிப் பார்க்கிறீர் கள்?'' ''காதலை விட்டுக் கொடுப்பதும் காதல்தான் என்று என் தம்பிகளிடம் சமாதானம் சொல்வேன். காதல் என்பது ஒவ்வொரு உயிருக்கு உள்ளும் உண்டு. அது எங்கும், எதன் பொருட்டும் நின்றுவிடாது. ஒரு நதியின் பயணம் போல உயிருக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு உறவு நீடிக்க முடியாது என்கிற நிலை வரும்போது இருவரும் கலந்து பேசி இணக்கமான முடிவெடுத்துப் பிரிவது நல்ல விஷயம். எல்லா இதயங்களிலும் உண்டு கண்ணீரின் வலி. காலம் காயங்களாற்றும். காதலுக்காக இலக்குத் தெரியாமல் ஓடிப்போகிறவர்களையும் வாழ்வையே முடித்துக்கொள்கிறவர்களையும் பார்த்து நான் வருந்துகிறேன்.

காதல் வாழ்வின் கொண்டாட்டம்தான். வாழ்வு அதைவிடப் பெரியது!'' ''காதலர் தினம் பற்றி உங்களது பார்வை என்ன?'' ''மனிதர்களே பூத்துக் குலுங்குகிற திருவிழாக்கள் தான் நம் வாழ்வின் அடையாளம். கூடிவாழ்தலுக்கான அத்தனை வாய்ப்புகளையும் அந்தக் கொண்டாட்டங்கள் மீட்டுத் தருகின்றன. வண்ணங்கள், புன்னகைகள், பரிமாறல்கள், எனத் திருவிழாத் தருணங்களை நான் ரசிக்கிறேன். தமிழர் களின் காதலர் தினம் 'காணும் பொங்கல்' காலம் தான். அன்பை வண்ணங்களாக்கி, பூக்களாக்கி ஊரும் உறவும் கூடித் திளைத்து நெலூசு பொங்கும் நேரம் அது. 'காதலுக்கு தினம் ஏது தினமும்' என்று என் தம்பியருவன் எழுதியதைப் போலத்தான் எனது உணர்வும்.

'காதலர் தினம்' என்பதை வியாபாரத்துக்கான அடையாளமாக நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தங்க நகைகள், பரிசுப்பொருட்கள் இவை அல்ல காதலின் அடையாளங்கள். காதலர் தினத்துக்குத் தரவோ பெறவோ மிகச் சரியான பரிசு காதல் மட்டும்தான்!''

ஒரு வரி நீ
ஒரு வரி நான்
திருக்குறள்நாம் அன்பே!அன்பே!

தாஜ்மஹாலில்
வசிப்பது
மும்தாஜா?
காதலா?

அருகில் இருக்கும்போது இதழை உறிஞ்சுகிறாய்!
தூர இருக்கும்போது உயிரை உறிஞ்சுகிறாய்!

ராசாத்தி
என் கனவுக்காட்டுக்குள்ளே வந்து
உயிரைக்கூட்டிச் சென்ற மகராசி!
உன்கொலுசுப் பாட்டுக்குள்ளே வந்து
மனசும்மாட்டிக்கொண்டுநாளாச்சி!

ஊனே.. ஊனே... உருக்குறானே...
உயிரின் மீதே உயிரை வைத்து நசுக்கறானே...
கண்ணால் என்னைக் குடிக்கிறானே...
ஆதாம் ஏவாள் ஆப்பிள் தின்னஅழைக்கிறானே...

மறப்பதென்றால் அது முடியவில்லை.
நினைப்பதென்றால் மனம் சலிப்பதில்லை.

பிரிவொன்றைச் சந்தித்தேன் முதன்முதல் நேற்று!
நுரையீரல் தீண்டாமல் திரும்புது காற்று!

காதல் வழிச் சாலையிலே வேகத்தடை ஏதுமில்லை!
நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை!

மாலை என்வேதனை கூட்டுதடி!
காதல் தன்வேலையைக் காட்டுதடி!

அறிவுமதி

நன்றி: ஆனந்தவிகடன்

வெள்ளி, அக்டோபர் 28, 2005

வாழுகிற சுத்தத் தமிழன் அறிவுமதி

தமிழன், தமிழ் மண், தொன்மம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி: பாரதிராஜா புகழாரம்

தமிழின எழுச்சிக் கவிஞர் அறிவுமதி இயக்கிய குறும்படமான நீலம் திரைப்பட பாராட்டு விழா சென்னையில் கொட்டும் மழைக்கிடையில் புதன்கிழமை மாலை 12.10.2005 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் இராசாராம் தலைமை வகித்தார்.
இயக்குநர் பாரதிராஜா பேசியதாவது: இவன் அறிவுமதி என் நண்பன் என்று சொல்வதா என் சீடன் என்று சொல்வதா?. இந்த உலகில் தனக்குத்தானே அழுது கொண்டு, சிரித்துக்கொண்டு தனக்காகவே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் பிறருக்காக வருத்தப்படுவான், தேடுவான், வாழ்வான்...இப்படி பிறருக்காக வாழ்கிறவர்கள் இந்த ஆறரை கோடி தமிழரில் நான் உட்பட எவருக்கும் தகுதி இல்லை. என் அறிவுமதிக்கு மட்டுமே அந்த முழுத் தகுதி உண்டு. அவன் வாங்கிய அடிகளில் சுயத்தன்மையோடு சுயம்புவாக எழுந்து நிற்கிறவன். குழந்தைகால மனதில் அவன் மனதில் தமிழன் என்ற உணர்வும் தொன்ம உணர்வும் எப்படி பதிவானதோ அப்படியே இருக்கிறான் இன்னமும். அவன் சுத்தமான மனிதன். அவனுக்கு பாடல் எழுதத் தோன்றினால்தான் எழுதுவான். இந்த நீலம் படம் கூட அவனுக்குள் இருந்த அரிப்பின் வெளிப்பாடு. பிறரது சோகத்தைச் சொல்ல வேண்டும் என்கிற அரிப்பின் வெளிப்பாடு. இந்தப் படத்தில் அந்தச் சிறுவன் கடல் அலை அடிக்க அடிக்க ஓடி ஓடிச் சென்று நண்டைத் தோண்டி எடுத்து பேசுகிறான்...என் அம்மாவைப் பார்த்தாயா? என்று. அந்தச் சிறுவன் நண்டுக்காகத் தோண்டும் போது இந்த கடலுக்குள்ளே உன்னைப் போல் தான் அவர்களும் என் மக்களும் போனார்கள். நீ மட்டும் உயிரோடு உள்ளாய். என் மக்கள் இல்லையே என்று சொல்வதைப் போல் கவிதையாக்கியிருக்கிறான் அறிவுமதி. என்னிடம் அவன் ஆசானாக பழகியதை விட தாயின் பரிவுடன்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறான். தமிழன், தமிழ் மண், தொன்மம், கலாச்சாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டு இம்மியளவும் பிசகாமல் வாழுகிற சுத்தத் தமிழன் என் அறிவுமதி. நீலம் குறும்படத்தை கவிதையாய் சொல்லி இருக்கிறான். 10 தமிழர்கள் கூடி நின்று சப்தமாகத் தமிழைப் பற்றி பேசுவது கூட இங்கே பிரச்சனையாக்கப்படுகிறது. தங்கர்பச்சான் அமைதியாகப் பேசி இருந்திருக்கலாம். உணர்ச்சிவசப்பட்டு விட்டான். அவனுக்கிருந்த கலைவெறியில் பேசியிருக்கிறான். அந்த 20 நாட்கள் நான் இங்கு இல்லை. இருந்திருந்தால் தங்கரை சட்டையைப் பிடித்து அறைந்திருப்பேன்? எங்கே போய் என்ன செய்து விட்டு வந்தாய் என்று? யாரை எங்கே நிறுத்துகிறார்கள்? உன்னை மன்னிப்புக் கேட்க வைத்த நிகழ்ச்சி தமிழ்த் திரை உலக வரலாற்றின் கறை. அது அழியவே அழியாது. அழிக்கவும் முடியாது. துடைக்கவும் முடியாது.மதம் என்பது போதை. பஞ்ச பூதங்களைத்தான் அனைவரும் உச்ச சக்தியாக வணங்கி வருகிறார்கள். இந்த நாட்டின் மத்திய அமைச்சர்களாகட்டும், மாநில அமைச்சர்களாகட்டும் அனைவரும் பொதுமனிதர்கள். சட்டப்பேரவை உறுப்பினர் முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை அனைவரும் ஏன் குடியரசுத் தலைவர் வரை அவர்கள் பதவி வகிக்கும் 5 ஆண்டுகாலத்தில் பொதுமனிதனாக இந்த சமூகத்தால் அவன் தரித்திருக்கிற அனைத்து அடையாளங்களையும் அவன் வின்சென்ட்டாக இருந்தாலும், அகமதாக இருந்தாலும், சின்னச்சாமியாக இருந்தாலும் அதை கழற்றிவிட்டு பொதுமனிதனாக வாழ வேண்டும். அதற்கான கட்டாய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றார் பாரதிராஜா.

திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு: தம்பி அறிவுமதி நல்ல தமிழ் உணர்வாளன். சத்தியகீர்த்தி. எந்த காலகட்டத்திலும் அவன் சத்யகீர்த்தியாகவே வாழ்கிறான். உள்ளேன் அய்யா என்ற படமெடுப்பதாக சொன்னான். ஆனால் அந்தப் படம் எடுப்பதாகத் தெரியவில்லை. தனக்காக முதலீடு செய்த அற்புதம் என்ற அற்புதமான மனிதருக்காக இன்னமும் காத்திருக்கிறான். இது குறித்து கேட்டபோது, அண்ணே, இந்தப் படத்துக்கான 6 பாடல்களையும் பதிவு செய்துவிட்டேன். அதை முடித்துவிட்டு உங்களுக்குப் படம் செய்து தருகிறேன் என்றான். தொப்புள்கொடி என்ற படத்தை செய்துதருவதாக சொன்னான். படத்தின் பெயரைப் பதிவு செய்து 2 ஆண்டு காலமாகிவிட்டது. இன்னமும் அவன் செய்து தரவில்லை. சிறைச்சாலை என்ற படத்தை உயிர்பித்த சிற்பி. எதிரியின் நரம்புகளால் கொடியேற்றுவோம் என்று எழுதியவன். 20 கோடி ரூபாயை ஆளவந்தான் படத்தில் முதலீடு செய்து ஒரு தூரோகத்துக்குப் பால் வார்த்தேன். இந்த சத்யகீர்த்திக்கு நீர் ஊற்றிட நீ என்னிடம் விரைந்துவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

திரைப்படத் தொகுப்பாளர் ஜெயம் மோகன்: திரையரங்குகளில் செய்திப் படம் போடுவதைப் போல் சில நிமிடங்கள் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்தக் குறும்படங்கள் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி குறும்படங்களின் நோக்கம் வெற்றி பெறும்.

இயக்குநர்நடிகர் தங்கர்பச்சான்: உயர்ந்த பண்பாளராக, நினைத்ததைப் பேசக்கூடிய சிறந்த மனிதராக, கலையாளனாக அண்ணன் அறிவுமதி இருக்கிறார். என் தமிழின உணர்வுக்கு உரமாக இருந்தவர். என் பண்புகளை மாற்றியவர். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இருந்த சிந்தனைகள் வேறு. தமிழ், தமிழர் என்று இப்போது நான் பேசிவரும் சிந்தனைகளுக்குத் தூண்டுகோலாக இருக்கிறவர் அண்ணன் அறிவுமதி. புரஜெக்டர்கள் எனப்படுகிற படம்காட்டும் கருவி மூலம் பல பாவச்செயல்களை செய்து வரும் திரையரங்குகளில் இந்தக் குறும்படங்களும் ஒளிபரப்பப்பட வேண்டும். இதற்கு தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். தன் பொருளாதர நிலை தாழ்ந்து இருந்தாலும் உணர்வுகளில் தாழ்ந்துபோகாத இந்தக் கலைஞன் அறிவுமதி நாம் எப்படி பயன்படுத்தப் போகிறோம்?

ஏற்புரையில் இயக்குநர்-கவிஞர் அறிவுமதி: பேராசிரியராக வேலைக்குப் போக வேண்டியவனை கெடுத்தவர் 16 வயதினிலே படம் எடுத்த என் ஆண் தாய். இரும்புச் சுவருக்குள் இருந்த திரை உலகத்தை எங்கிருந்து வந்தாலும் எந்த சேரியிலும் இருந்து வந்தாலும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று எங்கள் கைகளை பற்றியவர்கள் பாரதிராஜாவும், இளையராஜாவும். அதனால்தான் பாரதிராஜா, இளையராஜா மீது ஒரு துரும்பு விழுந்தாலும் ஆவேசத்தோடு தடுக்கிற முதல் தமிழனாக நேற்று மட்டுமல்லஇன்றும் நாளையும் இருப்பேன். தாமிரபரணி நதிக்கரையில் மீன்கள் கடிக்க கடிக்க என் ஆண்தாய் முதுகில் அழுக்குத் தேய்த்திருக்கிறேன். விடுடா, விடுடா எங்கம்மா நினைவு வருகிறது என்று அவர் சொல்வார்.நான் அவர் முதுகின் அழுக்கு துடைத்தேன். அவர் தமிழ்த் திரை உலகின் அழுக்குகளைத் துடைத்தவர். இன்று அவரையும் பின்தள்ளுகிறார்கள்.ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் தமிழ் அடையாளம் இல்லை. குறும்படங்கள்தான் சமூகப் பணியாற்ற வேண்டும். கிழக்குச் சீமையில் படத்தில் நான் பணிபுரிந்ததைப் பார்த்த சிறைச்சாலை படத்தின் உரையாடல்பாடல் நீதான் எழுத வேண்டும் என்ன சொல்கிறாய் என்று சொல்லிவிட்டு ஒரு புன்னகையோடு முழுப்படத்துக்கும் என்னை பொறுப்பாக்கியவர். இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா ஆகியோரிடம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு இயக்குநராக உருவாக இருந்த என்னை சிறைச்சாலை படம் மூலம் பாடல்களை எழுத வைத்தவர் கலைப்புலி தாணு அண்ணன். ஏ.ஆர். ரகுமானிடம் அழைத்துச் சென்று இவனை பரிந்துரைக்கிறேன் என்பதற்காக வாய்ப்புக் கொடுக்காதே.. மெட்டுக்குப் பாட்டெழுதட்டும். மெட்டு கொடு என்று சொன்னார். நான் இதுவரை 120க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியிருக்கிறேன். எந்தத் தயாரிப்பாளரிடமும் எந்த இசையமைப்பாளரிடமும் போய் வாய்ப்புக்காக எப்போதும் நான் கேட்டதே இல்லை. தொப்புள்கொடி திரைப்படம் குறித்து அண்ணன் தாணு கூறினார். அது மொரீசியசிலிருந்து தமிழ் அடையாளத்தை தேடி வரும் பெண்ணின் கதை அது. என் ஆசான் பாரதிராஜா, தங்கர்பச்சான், தம்பி சீமான் உள்ளிட்ட பலரது கூட்டு முயற்சியில் அது விரைவில் உருவாக்கப்படும். அதை தாணு அண்ணன் மிக விரைவில் பெற்றுக்கொள்வார் என்று உறுதியளிக்கிறேன் என்றார் அறிவுமதி.

இந்த நிகழ்வில் நீலம் குறும்படமும் திரையிடப்பட்டது. நிகழ்வில் மதுரா பாலன், இராசாராம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். நீலம் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் பரிசில்கள் வழங்கப்பட்டன.

நன்றி - புதினம்.காம்

அறிவுமதியின நீலம்



அண்ணன் அறிவுமதி அற்புதமான மனிதர். எதையும் முழுமையாக செய்ய முயலுபவர். சுனாமி இழப்பை சிறப்பாக பதிவுசெய்யும் நோக்கில் ''நீலம்'' குறும்படம் உருவாக்கினார். அதை பற்றி உண்மை இதழில் வெளியான செய்தி...

2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

“நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.

தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.

தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.
“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா?”
என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை

அறிவுமதி நேர்காணல்

இலட்சியக்கவி அறிவுமதி அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்...

அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?

அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்கு மட்டும் ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.

கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?

என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும் இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.

உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..

முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.

உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள் பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன?

தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...

தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும்.

இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்?

இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது? தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.

நன்றி: துவக்கு