வெள்ளி, அக்டோபர் 28, 2005

அறிவுமதியின நீலம்



அண்ணன் அறிவுமதி அற்புதமான மனிதர். எதையும் முழுமையாக செய்ய முயலுபவர். சுனாமி இழப்பை சிறப்பாக பதிவுசெய்யும் நோக்கில் ''நீலம்'' குறும்படம் உருவாக்கினார். அதை பற்றி உண்மை இதழில் வெளியான செய்தி...

2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.

“நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.

தமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.

நான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.

என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.

தமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள்? எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.

தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா? இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.
“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா? சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா? நீ சொல்ல மாட்டியா?”
என்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.

படத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.

தான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.

நன்றி : உண்மை

10 கருத்துகள்:

தமிழ் அலை சொன்னது…

சென்ற முறை பிரியன் சென்று வந்த பொழுது - அந்த குறும்பட குறுந்தகடு பணிகள் நிறைவடையவில்லை. அதனால் அதை எடுத்து வரமுடியவில்லை.

இப்பொழுது தயாராக உள்ளது. ஆனால், அதை எடுத்து வருவதற்கு இப்பொழுது ஆட்களில்லை. என்றாலும் விரைவில் யார் மூலமாவது வந்து சேரலாம். வந்தவுடன், இங்கு துபாயில் அறிமுக விழா எடுத்து சிறப்பாக வெளியிட துவக்கு ஏற்பாடுகள் செய்யும். படைப்பாளிகள் தங்களது படைப்புகளை நம்பியே - வாழ்க்கையை நடத்த வேண்டி இருப்பதால் - இந்த குறுந்தக்டை விலைக்கு விற்று அந்தப் பணத்தை படைப்பாளிகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற தன்முனைப்பில் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

அமீரகத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. கொடுத்து விடுவதற்கு. ஆனால் மற்றைய நாடுகளில் எவ்வாறு கொடுப்பது என்று தெரியவில்லை.

உங்கள் யோசனை என்ன?

இளங்கோ-டிசே சொன்னது…

நீலம் குறும்படம் பற்றிய தகவலுக்கு நன்றி.
....
நிரு என்று இந்தப்படத்துக்கு இசையமைப்பவர், ஈழத்தில் நான் படித்த பாடசாலையில் படித்த நண்பராக இருக்கவேண்டும் (விகடன் செய்தியில் வந்த நபரும் இவரும் ஒருவரெனில்; பிரான்சில் வசித்து வருபவர்). எல்லோரும், தமிழ்மக்கள்பட்ட துயர்களை வெளிக்கொணர்வதற்காய் ஒன்றிணைந்திருப்பது நல்ல விசயத்தானே.

துளசி கோபால் சொன்னது…

இங்கே நியூஸிலாந்திலிருந்து துளசி எழுதுகின்றேன்.

இந்தக் குறும்படம் எங்களுக்கு அனுப்புவீர்களா?

மற்ற விபரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

என் மின்னஞ்சல் முகவரி.


tulsigopal@xtra.co.nz

என்றும் அன்புடன்,
துளசி.
( கன்டர்பரி தமிழ்ச் சங்கம்)

தமிழ் அலை சொன்னது…

விகடனில் வந்த அதே செய்தி தான். அதே நிரு தான். அவர் உங்கள் பள்ளி நண்பர் என்றால் மிக்க மகிழ்ச்சி.

இந்த ஒன்றில் மட்டுமல்ல பிறவற்றிலும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் அவாவும் உண்டு.

காலம் தான் பதில் சொல்லனும்.

நன்றி நண்பரே - தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

அன்புடன்
நண்பன்
முத்துகுமரன்
இசாக்
கவிமதி
தமிழன்பு

தமிழ் அலை சொன்னது…

துளசி கோபால் அவர்களே

மிக்க மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது - உங்கள் விசாரிப்பு.

இது பற்றிய செய்தியை அண்ணன் அறிவுமதி அவர்களுக்கும் அனுப்பி வைக்கிறேன்.

குறுந்தகடு அனுப்புவதில் பிரச்சினையில்லை. எப்படி அனுப்புவது தான் என்பதே பிரச்சினை. நாங்கள் ஒரு ஐம்பது குறுந்தகடு அளவிற்கு சொல்லி வைத்திருக்கிறோம். அந்த குறுந்தகடுகள் வந்ததும் தனிமடலில் தொடர்பு கொள்கிறோம்.

அன்புடன்

நண்பன்
முத்துகுமரன்
இசாக்
கவிமதி
தமிழன்பு

தமிழ் அலை சொன்னது…

டிசெ தமிழன்

உங்களுக்கு கூடுதலாக ஒரு செய்தி -

சுனாமி பேரழிவு பற்றி அண்ணன் அறிவுமதி இயற்றிய பத்து பாடல்கள் தொகுப்பு குறுந்தகடாக வெளிவருகிறது.

அதில் சில பாடல்களுக்கு நிரு இசையமைத்திருக்கிறார்.

இந்த குறுந்தகடு டிசம்பர் 26ம் தேதி அன்று வெளிவர இருக்கிறது.

நன்றி

இளங்கோ-டிசே சொன்னது…

தகவலுக்கு நன்றி நண்பர்களே.
....
கனடாவிலும் அந்த இசைத்தட்டைப் பெறமுடியும் என்று நம்புகின்றேன். இல்லாதுவிடின் உங்களுடன் தொடர்புகொள்கின்றேன். நன்றி.

பெயரில்லா சொன்னது…

மலேசியாவில் இந்த நீலம் குறும்பட குறுவட்டை எங்குப் பெறலாம்... அவருடைய மலேசிய வருகை எப்போது?

பிரியமுடன்... புனிதா
punithavm@yahoo.com

மேமன்கவி பக்கம் சொன்னது…

தம்பிகளுக்கு
ஒரு அவசர செய்தி!
இன்று எனது yahooமின்னஞ்சல் முகவரிக்கு
இன்று காலை முதல் நண்பர் அறிவுமதியின்
hotmail மின்னஞ்சல் முகவரியிருந்து 10 மேலான வைரஸ்கள் அடங்கிய மோசமான மின்னஞ்சல்கள் வந்த வண்ணமே இருக்கின்றன. கவனிக்கவும். இது யாருடைய சதி?
தேடுங்கள் உடனடியாக
மேமன்கவி
15.02.2007

பெயரில்லா சொன்னது…

அண்ணன் அறிவுமதி அவர்களின் நேர்கானலை சமீபத்தில இந்தியாகிளிட்ஸில் கண்டேன். அண்ணனைப் பற்றி நிறைய கேள்விப் பட்ட போதும் அன்றே அவரை முதல் முறையாகக் கண்டேன்.

இந்த தளம் அமைத்த குழுவுக்கு நன்றி. அந்த குருந்தகடு அமெரிக்காவில் எனக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறதா?

நன்றி,
ரத்தன்.