வெள்ளி, அக்டோபர் 28, 2005

அறிவுமதி நேர்காணல்

இலட்சியக்கவி அறிவுமதி அவர்கள் பற்றிய எங்களின் அறிமுகமோ, குறிப்போ உணர்த்தாதவற்றை அறிவுமதி என்ற பெயர் உணர்த்தும்...

அரசியல் பற்றிய தெளிவு உங்களுக்கு எப்போது வந்தது?

அரசியல் பற்றிய தெளிவு என்னுடைய இளம் வயதிலேயே தொடங்கிவிட்டது. வயல்காட்டில் வேலைபார்க்கும் மக்களுக்கு அரை வயித்துக் கஞ்சியும் கால் வயித்து சாப்பாட்பாட்டுக்கான கூலியும் வழங்கப்பட்டு வந்தது பற்றி சின்ன வயதிலேயே என்; தாயாரிடம் கேள்வி கேட்பேன் அப்போதே என்னுடைய அரசியல் தொடங்கிவிட்டது. அது மட்டுமல்ல எங்கள் ஊரில் புளியமரங்கள் குத்தகைக்கு எடுத்து விட்டு அதிலுள்ள பழங்களை உலுக்கியெடுத்து பங்கு போடும் போது சேரிவாழ் மக்களுக்குரிய பங்கு மட்டும் ஒரு எழுதப்படாத தடை இருந்து வந்தது. இதையெல்லாம் பார்த்து பார்த்து இயல்பாகவே என்னுள் எழுந்த கோபம் தான் என்னை அரசியல் பாதையில் அழைத்து வந்தது.

கலை, இலக்கியம் ஆகியவற்றில் உங்களுடைய ஈடுபாடு எப்போது தொடங்கியது?

என்னுடைய தந்தை திராவிட இயக்கத்தில் ஈடுபாடு மிக்கவர். எனவே திராவிட இயக்கம் சார்ந்த இதழ்களும் செய்தித் தாள்களும் இயல்பாகவே எங்கள் வீடு தேடிவந்தது. அதை வாசிக்கும போதெல்லாம் ஏற்பட்ட உணர்வுகளும், அறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் ஆகியோரின் பேச்சுக்களை கேட்கும்போது உள்ள படியே உள்ளத்தில் உறங்கிக் கிடந்த கலை ஆர்வம் வெளிப்படத் தொடங்கியது. பிறகு அண்ணாமலைப் பல்கலை கழகத்தில் பட்டப்படிப்புக்காக சென்ற போது கவிதைகள் மீதான ஆர்வம் பிறந்தது. அதுவே இன்று வரை பல பரிமாணங்களாகத் தொடர்ந்து வருகிறது. திரைப்படப் பாடலுக்கான ஆர்வம் என்னுடைய நாட்டுப்புறத் தாய்மார்களிடமிருந்து தான் என்னுள் ஊற்றாகப் பொங்கியது. வயல்காட்டில் வேலை பார்க்கும் என் கிராமப்புறத்து தாய்கள் நாற்று நடும் போதும் - களை எடுக்கும் போதும், கதிர் அறுக்கும்போதும் எழுப்புகின்ற குலவை ஒலியில் தான் பாடலுக்கான சந்தம் பிறக்கிறது.

உங்கள் பயணம் அரசியல் தடத்தில் வரும்போது கலை, இலக்கியம் சார்ந்த உங்கள் பங்களிப்பு குறைந்து விட்டதாக கூறப்படுவது பற்றி..

முதலில் இந்தக் கேள்வியே தவறானது. கலை, இலக்கியம் அரசியல் இவற்றில் எந்த தளத்தில் பயணப் பட்டாலும் என்னுடைய இலக்கு மொழி, இனம், மண் சார்ந்துதான் காணப்படுகிறது. இதனால் என் மீது பட்ட வெளிச்சம் காரணமாக எனக்குரிய அடையாளமும், அங்கீகாரமும் ஏற்கனவே கிடைத்துவிட்டது. எனவே எந்தத் தடத்தில் பயணித்தாலும் இலக்கு ஒன்றாகவே இருக்கிறது.அதை நோக்கியே என் பயணமும் அமைந்திருக்கிறது.

உங்களுடைய ஆரம்ப கால அரசியல் திராவிடம் சார்ந்து அமைந்திருக்கிறது. தற்போது அது தமிழ் தேசிய தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. எப்போது? எப்படி? இந்த மாற்றம் ஏற்பட்டது?

தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலைத் துண்டித்துவிட்டு தமிழத்; தேசியம் குறித்துப் பேச முடியாது. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம் தமிழ்த் தேசியம் என்பது திராவிட அரசியலின் நீட்சி. அடுத்த கட்டம். தமிழ் தேசியம் குறித்த என்னுடைய பார்வையை விசாலப்படுத்த அய்யா பழ.நெடுமாறன் போன்றவர்களின் நெருக்கம் காரணமானது. தலித் அரசியல் குறித்த பார்வையை இன்றைக்கு திருமாவளவன் திறம்பட முன்னெடுத்துச் செல்கிறார். இவர்களுடன் இணைந்து என்னுடைய சிறிய பங்களிப்பும் இருப்பதில் உள்ளபடியே எனக்கு மிக்க மகிழ்ச்சி.

இன்று தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் உங்கள் பயணமும் அமைந்திருக்கிறது. அந்த வகையில் உங்கள் பார்வையில் உலக தமிழர்களின் நிலை என்ன?

தாயகத்தில் இருப்பவர்களைவிட புலம்பெயர்ந்து வாழக்கூடிய மக்களிடம் மொழி, இனம், அரசியல் குறித்த தெளிவான கொள்கை சிந்தனை உள்ளது. காரணம் தாயகத்தை விட்டு பிரிந்து சென்றபிறகு இயல்பாகவே அவர்களுக்குள்ளே எழுகின்ற தேடல் தான். அந்த வகையில் ஜரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத்து மக்கள் மொழி, இனம், பண்பாட்டு அடையாளங்களைப் பேணிக்காப்பதில் முன்னிலை வகிக்கிறார்கள.; இந்திய தமிழர்கள் மலேசியாவிலும் இங்கு(அமீரகத்திலும்) அதன் அடியொற்றி செயல்பட்டு வருகிறார்கள். இதைக் காணும் போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

தமிழைத் தொலைத்து நிற்கும் இன்றைய தமிழ்த் தொலைக்காட்சிகள் பற்றி...

தாயை வைத்து வணிகம் செய்யும் தறுதலை பிள்ளைகளாய் இந்த ஊடகங்கள். இவை செய்யும் தமிழழிப்புச் செயல்களை எவ்விதம் வெறுப்பது? தமிழர்களின் கருத்துருவாக்க மனிதர்களாக நமக்கு அறிமுகப்படுத்தும் சோ, மாலன், ஏவி.ரமணன், விசு போன்றவர்கள் தமிழின துரோகிகள். நாடகங்களில் பொரும்பான்மையாக பார்ப்பன அக்ரஹாரத்து கழுதைகள். நிகழ்ச்சித் தலைப்புகள் யாவும் ஆங்கிலக் கந்தல், நிகழ்ச்சி அறிப்பாளர்கள் உடையும், உச்சரிப்பும் கண்ணையும் காதையும் பொத்திக்கொள்ள வைப்பன. மோதிரக்கல், வாஸ்து சாஸ்திரம் என நமக்குள் வீடு நுழைந்து கொள்ளையடிக்கும் திருடர்களை நம்மையறியாமலேயே அனுமதித்துக் கொண்டிருக்கும் அவலம். தமிழார்வலர்கள் தொலைக்காட்சித் துறையிலும் திரைப்படத்துறையிலும் இறங்குகிற போது தான் இந்த ஊடகங்கள் மதிக்கத்தகுந்த ஊடகங்களாக மதிப்பு பெரும்.

இன்றைய சூழலில் தமிழ்த் திரைப்படங்களை எப்படி உள்வாங்கிப் பார்க்கிறீர்கள்?

இன்றைய தமிழ்த் திரைப்படங்கள் என்பன நமது இன மக்களின் இன அடையாளங்களை அழித்து ஒழிக்க முயற்சிக்கின்றன. தமிழ் மீதும், தமிழினத்தின் மீதும் பரிவும் பற்றும் கொண்ட தமிழ் முதலாளிகள் இந்த ஊடகங்களை காப்பாற்ற முன்வர வேண்டும்.இன்றைய தமிழகச் சூழலில் மொழி பற்றிய விழிப்புணர்வு, அரசியல் நிலை எப்படி இருக்கிறது? தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு குறிப்பிட்டசாரார் தான் தமிழ் மொழி, இனம், கலை ஆகியவற்றின் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பரப்பப்பட்டு வந்த மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகத் தொடங்கி இருக்கிறது. ஆனாலும் இந்த விழிப்புணர்வு தமிழகத்தின் எல்லா மூலை முடுக்குகளையும் சென்றடைய வேண்டும். அதற்கான பயணம் தாயகத்தில் தொடங்கிவிட்டது. விரைவில் நல்ல சூழல் மலரும்.

நன்றி: துவக்கு

1 கருத்து:

தினேஷ் சொன்னது…

இந்த தொகுப்பை படித்ததால், நானும் தழிழ் பற்றி திவரமாக சிந்திக்க துவங்கிருக்கிறேன். சிந்தினையை துண்டும் தொகுப்புகள்.

நன்றி

நான் இப்பொழுது தான் கவிதை எழத முயற்சித்து, சில கவிதைகளை எழித்திருக்கிறேன். தங்களுக்கு நேரம் இருந்தால் படித்து கருத்து கூற வேண்டுக்கிறேன்.


தினேஷ்